Tuesday, December 28, 2010

ஆய்வாளர்களுக்குத் தமிழ் இணைய தளங்கள் அறிமுகம்

தமிழ் இணைய தளங்கள் அறிமுகம்



மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி தமிழாய்வுத் துறை சார்ந்த ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இன்று(28.12.2010) தமிழில் உள்ள இணைய தளங்கள் நேரடி செயல்விளக்கப் பயிற்சி மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ் இணைப் பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் இந்தப் பயிற்சியை நடத்தினார். ஆய்வியல் நிறைஞர் மாணவர்கள் இந்தச் செயல்விளக்க நேரடிப் பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Tuesday, December 21, 2010

பாப்பா உமாநாத் காலமானார் - மக்கள் அஞ்சலி - பெண்கள் கதறல்

மறைந்தப் பெண்ணியப் போராளி, களச் செயல்பாட்டாளர், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், இடது கம்யூனிஸ்ட் மைய, மாநிலக் குழுக்களின் உறுப்பினர் பாப்பா உமாநாத் அவர்கள். அவர்களின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மாவட்ட அலுவலக கட்டிடத்தில் வைக்கப்பட்டது. தமிழ்த்திணையின் சார்பில் மறைந்தப் போராளிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பொதுமக்களும், பல்வேறு அரசியல் இயக்கம் சார்ந்தவர்களும் பெண்ணியப் போராளிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அஞ்சலி செலுத்த வந்தவர்களில் பெண்கள் கதறி அழுத காட்சிகள் நெஞ்சை நெகிழ வைத்தது. தமிழ்த்திணையின் சார்பில் இந்தக் காணொளி கட்சி அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படுகின்றது.

Sunday, December 19, 2010

பாப்பா உமாநாத் இன்று (17/12/2010)திருச்சியில் காலமானார்- வீரவணக்கம்



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாப்பா உமாநாத் இன்று திருச்சியில் காலமானார்.தமிழ்த்திணையின் சார்பில் ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் நேரில் சென்று வீரவணக்கம் செலுத்தினார்.
இவருக்கு வயது 82. திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே அண்ணாநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த பாப்பா உமாநாத், வயது முதிர்வு காரணமாக காலமானார்.
இவர் திருச்சி அருகே உள்ள திருவரம்பூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். தற்போது வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாதர் சங்கத்தில் மாநில பொறுப்பு வகித்து வந்தவர்.
இவரது கணவர் உமாநாத் முன்னாள் எம்பி ஆவார். இவர்களுக்கு கண்ணம்மாள், வாசுகி, நிர்மலா ராணி ஆகிய மூன்று மகள்கள் இருந்தனர். கண்ணம்மாள் கடந்த வருடம் காலமானார்.

மறைந்த பாப்பா உமாநாத் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்களும், இதர கட்சியினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாப்பா உமாநாத் மறைவு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான தோழர். பாப்பா உமாநாத் டிசமபர் 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருச்சியில் காலமானார்.
பொன்மலையில் செயல்பட்டு வந்த தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் தொழிற்சங்கப் பணிகளில் சிறு வயது முதலே அவர் துடிப்புடன் ஈடுபட்டு வந்தார். 1946ம் வருடம் தொழிலாளர் போராட்டத்தை தொடர்ந்து அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோது, சங்கத்திடல் மைதானத்தில் குண்டடிப்பட்டு தொழிலாளர்களுடன் அவர் இருந்தார்.
1948ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட கட்சியில் தனது இளம் வயதிலேயே பாப்பா உமாநாத் தீவிரமாக செயல்பட்டார். சென்னையில் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்த போது அவருடைய தாயார் லட்சுமி அம்மாள் இறந்த செய்தி வந்தது. கட்சியிலிருந்து விலகுவதாக எழுதிக் கொடுத்தால் தான் உங்கள் அம்மாவை பார்க்கலாம் என்று அரசு சொன்னபோது, உறுதியாக மறுத்த வீராங்கனை தோழர் பாப்பா உமாநாத்.
1962ம் ஆண்டு இந்திய - சீன எல்லை மோதலை தொடர்ந்து பாதுகாப்பு கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1973ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாப்பா உமாநாத், கே.பி. ஜானகியம்மாள் முயற்சியால் ஜனநாயக மாதர் சங்கம் துவங்கப்பட்டது. அதன் அமைப்பாளராக பாப்பா உமாநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாப்பா உமாநாத் தலைமையில் இயங்கிய ஜனநாயக மாதர் சங்கம், பெண்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும், மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து:ம ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ளது. பெண்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராக போராடும் போர்க்குணமிக்க அமைப்பாக வளர்த்தெடுத்ததில் பாப்பா உமாநாத்துக்கு பெரும் பங்குண்டு.
1989 ஆம் ஆண்டில் திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், சட்டமன்றத்தில் சிறப்பாக பணியாற்றினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், மத்தியக்குழு உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றி மக்களின் அன்புக்கும், பாசத்திற்கும் உரியவராக அவர் விளங்கினார். அவரது மறைவு கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

பத்திரிக்கை செய்திகளுடன் திருச்சியிலிருந்து நிலவன்

அமெரிக்காவைக் கலக்கிய தமிழர் கே.ஆர். ஸ்ரீதர்




கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.

மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.

இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட
தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும்.

ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித்தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம். உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.

ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. 100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Tuesday, December 14, 2010

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் - ஏவிசி கல்லூரி -14.12.2010

ஒருமைவகைப் பல்கலைக்கழக முயற்சியை முழுமையாகக் கைவிடக்கோரி இந்திய மாணவர் சங்கம்
ஏவிசி கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டம்

அரசு உதவிபெறும் கல்லூரிகளான மதுரை தியாகராசர கல்லூரி, கோவை பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி நிறுவனங்களைத் தனியார் சுயநிதி ஒருமைவகைப் பல்கலைக்கழகமாக மாற்றும் தமிழக அரசின் முயற்சியை முழுமையாகக் கைவிடக் கோரி மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி வாயில் முன்பு காலை 9 மணியளவில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க நாகை மாவட்டத் தலைவர் பி.மாரியப்பன் தலைமை தாங்கினார். ஒருமைவகைப் பல்கலைக்கழகம் அமைந்தால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், தனியார்மயம், தராளமயம் இவற்றிற்கு ஊக்கம் அளிக்கும் செயலாக இருக்கும் என்பதை வலியுறுத்தி நாகை மாவட்ட இந்திய மாணவர் சங்கச் செயலாளர் வா.சிங்கரவேல் அவர்கள் எடுத்துரைத்து எழுச்சியுரையாற்றினார். மாணவர், ஆசிரியர் இந்தப் பிரச்சனையில் போராடத் தேவையில்லை என்ற தமிழக முதல்வர் அவர்களின்அறிக்கை வெளிவர இந்தி மாணவர் சங்கம் தொடக்க நிலையிலிருந்து உறுதியாக இருந்தது என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத தஞ்சை மண்டலத் தலைவர் பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் பாராட்டினார். இந்திய மாணவர் சங்கம் மாணவர்களின் அடிப்படையான உரிமையான கல்வி உரிமைக்காகப் போராடி வருகின்றது. அதன் செயல்பாடுகளுக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்க ஏவிசி கிளைப் பொருளாளர் பேராசிரியர் முனைவர் எம்.மதிவாணன் எடுத்துக்கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத் துணைத் தலைவர் எஸ்.சரண்ராஜ், ஏவிசி கல்லூரி இந்திய மாணவர் சங்கக் கிளை நிர்வாகிகள் ஜெபராஜ், செல்லத்துரை, ஸ்டாலின், பிரவீண் மற்றும் 100க்கான மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் இந்திய மாணவர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.தமிழரசன் நன்றி கூறினார்.

ஒருமைவகைப் பல்கலைக்கழகம் எதிர்ப்பு - AUT, MUTA,TANTASC - சென்னை (12.12.2010)



சென்னை புதுப்பேட்டை பின்னி இணைப்புச்சாலையில் 12.12.2010 ஞாயிறு அரசு உதவிபெறும் கல்லூரிகளை ஒருமைவகைப் பல்கலைக்கழகமாக மாற்றும் தமிழக அரசின் முயற்சியைக் கண்டித்து பெருந்திரள் உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக,மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கம் பங்கேற்றன. இதில் சுமார் 1200பேர் கலந்துக்கொண்டனர்.
இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னணித் தலைவர் தளவாய் சுந்தரம் உரையாற்றினார். சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன், இந்திய மாணவர் சங்கம் மாநில பொறுப்பாளர் இராஜ்மோகன் எனப் பலரும் உரையாற்றினார்கள்.
ஆசிரியர், அலுவலவர், மாணவர் அமைப்பு நடத்திய இந்த உண்ணாவிரதம் சிறப்பாக நடந்தேறியது.

சென்னையிலிருந்து நிலவன்