Saturday, October 23, 2010

பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் மறைவுக்கு வீர வணக்கம்!

அந்தோ, நம் அறிவாயுதம் ஒன்று பறிக்கப்பட்டதே!
பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் மறைவுக்கு தமிழ்த்திணையின் வீர வணக்கம்!



கழகத்தின் அறிவு ஆயுதங்களில் ஒன்று இன்று (22.10.2010) மாலை இயற்கையின் கோணல் புத்தி காரணமாக நம்மிடமிருந்து பறிக்கப்பட்டது கொடுமை! கொடுமையிலும் கொடுமை!

கோவை தந்த கொங்கு அறிஞர், பெரியார் பெருந்தொண்டர், பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசான் அவர்களின் திடீர் மறைவு நம்மை திடுக்கிட வைத்ததோடு, சொல்லொணாத் துயரத்தில் தள்ளியுள்ளது!

சென்ற இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு பெரியார் திடலில் உடல்நலக் குறைவு (விடியற்காலையில்) ஏற்பட்டவுடன் நமது தோழர் கள் கலி. பூங்குன்றன், சீதாராமன் முதலியோர் ஒரு பிரபல மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் சென்று சிகிச்சை பெற வைத்து ஓரளவு நலம் பெற்றுத் திரும்பினார். அவர் கோவைக்கே சென்று நிரந்தரமாகத் தங்க முடிவு செய்து - என்னிடம் அனுமதி கேட்பதுபோல் சொன்னார். நான் உங்கள் உடல்நலம்தான் முக்கியம்; அவசியம் அதுபோலவே செய்யுங்கள்; அங்கிருந்தே எழுத்துப் பணி செய் யுங்கள் என்று கூறி கோவைக்கு அனுப்பினோம்.

அங்கிருந்து சில நாள்களுக்கு முன்தான் சென்னைக்குத் திரும்பினார் - அவரை, அவரின் துணைவியாரும், மகளும் பெரியார் திடலில் சந்தித்துவிட்டு, விடைபெற்று நேற்று (22.10.2010) இரவுதான் கோவைக்கு திரும்பினர்.

இன்று பகல் என் வாழ்விணையர் மற்றும் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தாராம். நான் உள்ளே பணியில் இருந்தேன். ஜனவரி பொங்கல்வரை - உலக நாத்திகர் மாநாடு வரை நான் பணியாற்றிவிட்டு, பிறகு கோவைக்குச் சென்று தங்குவேன் என்று கடமை உணர்வோடு சொல்லி, பெரியார் திடலில் தங்கியவருக்கு இன்று (22.10.2010) மாலை 6.30 மணிக்கு திடீர் என்று உடல்நலக் குறைவு; மருத்துவமனைக்கு செல்லு முன்பே மாரடைப்பு அவருக்கு ஏற்பட்டு உயிர் பிரிந்தது என்ற வேதனையான செய்தி திடலில் கூட்டத்தில் பேசி முடித்தவுடன் கிடைத்தது; அதிர்ந்து போனோம். கழகக் குடும்பத்தினர் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலை அழுத கண்ணீரோடு தெரிவிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

அயராத எழுத்துப் பணி, சிறப்பான பேச்சாற்றல், ஆழமான சிந் தனை வளம், அடக்கம் மிகுந்த பண்பின் குடியி ருப்பு, ஏராளம் படித்தும் தன் முனைப்பற்ற பல் திறன் அடங்கிய கொள்கலன் அவர்.

அவரது மறைவு அவரது குடும்பத் தினருக்கு - துணைவியார் பிள்ளைகள், உறவினர்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்றாலும் கழகத்திற்கு - குறிப்பாக நமக்கு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

தொண்டின் தூய உருவமான அவருக்கு நமது வீர வணக்கம்!

அவரது துணைவியார், பிள்ளைகள் அனை வருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

மானமிகு துரை. சக்ரவர்த்தி, பேராசிரியர் இராமநாதன், பேராசிரியர் இறையன் போன்றவர் களை இழந்த நிலையில், மேலும் இப்படி ஓர் இழப்பா! தாங்க இயலாத உள்ளத்தோடு உள்ளேன். பகுத்தறிவுவாதிகள் தாங்கித்தானே ஆக வேண்டும்? வேறு வழி இல்லையே!


தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
22.10.2010

நன்றி - விடுதலை

Monday, October 11, 2010

மறைந்தார் திருச்சி எம்.எஸ்.வெங்கடாசலம்(10.10.10)



திருச்சிராப்பள்ளி எம்.எஸ்.வெங்கடாசலம்(75) இன்று(10.10.10) காலை 5.30 மணியளவில் திருச்சியில் இயற்கை எய்தினார். திரு.எம்.எஸ்.வெங்கடாசலம் அவரகள் பேரறிஞர் அண்ணா அவர்கள் நடத்திய Homeland, திராவிடநாடு இதழ்களின் துணைஆசிரியராகப் பணியாற்றியப் பெருமைக்குரியவர். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுபம் பண்புடையவர். சிறந்த மொழிப்பெயர்ப்பாளர். கம்பராமாயணத்தின் 2000 பாடல்களை மொழிபெயர்த்துள்ளார். இந்த மொழிப்பெயர்ப்பு ஆகச்சிறந்தது எனப் பிரேமாநந்தக்குமார் அவர்களின் பாராட்டைப் பெற்றவர். பாரதிதாசன் பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அண்ணா இருக்கையில் ஆலோசகராகவும் தற்சமயம் பணியாற்றியவர். திருச்சி மாவட்ட திமுக செயலராக இருந்துள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு உடல்நலம் குன்றிய நிலையிலும் இவர் எழுதிய நான் கண்ட அண்ணா என்னும் நூல் வெளிவருவதற்கு முன்பே தமிழ்த்திணையில் மின்நூலாக வெளிவந்தது என்பது மின்நூல் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்ததாகும்.தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர் என்பதும் இவரின் தனிச்சிறப்பாகும்.பேரறிஞர் அண்ணாவின் மகன் பரிமளம் அவர்களுடன் இணைந்து எம்.எஸ்.வி.அண்ணா பேரவை என்னும் இலக்கிய அமைப்பைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பொறுப்பாளர்களை நியமித்து பல ஆண்டுகாலம் நடத்திவந்தார்.
தமிழ்த்திணை சார்பில் அதன் ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்கள் இயற்கை எய்திய அய்யா எம்.எஸ்.வி. அவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். தமிழக அமைச்சர்கள் மாண்புமிக கே.என்.நேரு, என்.செல்வராசு, மறுமலர்ச்சி திமுக முன்னணித் தலைவர் திருச்சி மலர்மன்னன் மற்றும் திராவிட இயக்கம் மற்றும் தமிழ் அமைப்பு சார்ந்த பலர் எம்.எஸ்.வி.யின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். அன்று மாலை 5.30 மணியளவில் திருச்சி புத்தூரிலிருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது. காவேரி தென்கரையில் உள்ள ஓயாமாரி இடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது.
தமிழ்த்திணையின் பால் மாறா அன்புகொண்ட எம்.எஸ்.வி.யின் புகழ் ஓங்கு என்று உரக்க முழக்கமிடுவோம்.

-தமிழ்த்திணைக்காக திருச்சியிலிருந்து நிலவன்

Tuesday, October 05, 2010

தீண்டாமைக் காவல்துறையை இழுத்துப்பூட்டும் போராட்டம் - 02.10.10 - திருச்சிராப்பள்ளி - பெரியார் திராவிடர் கழகம்.



தமிழ்நாட்டில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தாத காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புபிரிவின் திருச்சி அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம் வெற்றிகரமாக நடந்தேறியது. குழந்தைகள் பெண்கள் உட்பட 3000 இளைஞர்கள் கைதாயினர். திருச்சி வேர் அவுஸ் கிறிஸ்தவக் கல்லறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திருச்சி பழையகோவில் பங்குக்கு உட்பட்ட பகுதிகளான உப்புப்பாறை, செங்குளம் காலனி, சத்தியமுர்த்தி நகர் பகுதிகளிலிருந்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாயினர். சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, ஆதித்தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளின் தோழர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்று கைதாகி உள்ளனர். திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள மீனாட்சி திருமண மண்டபம், சௌடீஸ்வரி மண்டபம், பீமநகர் பாலாஜி மண்டபம், கே.கே. நகர் காவல்துறை சமுதாயக்கூடம் ஆகிய மண்டபங்களில் கைதான தோழர்கள் அடைத்துவைக்கப்பட்டனர். மண்டபங்களில் இடம் இல்லாததால் திருச்சி நகரைத் தாண்டி தோழர்களை அழைத்துச்சென்று நடுரோட்டில் இறக்கிவிட்டது போலீஸ். கைது கிடையாது, வீட்டுக்குச் செல்லுங்கள் என திருப்பி அனுப்பினர். தோழர்கள் தங்களை அவசியம் கைது செய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுடன் போராடியபிறகு புதிது புதிதாக மண்டபங்களை தேர்வுசெய்து அவற்றில் தோழர்களை அடைத்தனர். பீம நகர் பகுதியிலும் கருமண்டபம் பகுதியிலும் தோழர்கள் தங்களை அவசியம் கைது செய்யவேண்டுமென வலியுறுத்தி நடுரோட்டில் மறியல் செய்யத் தொடங்கிய பிறகே அனைவரையும் காவல்துறை கைது செய்தது. கைது எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட உளவுத்துறை அதிகாரிகள் பெரும் முயற்சி செய்தும் தோல்வியடைந்தனர்.

தகவல் மற்றும் ஒளிப்படங்கள் - தாமரை மற்றும் அரசெழிலன்(மின்னஞ்சல் வழி)