Thursday, March 18, 2010

கவிஞர்கள் சங்கம விழா - அழைப்பு

உ.வே.சா. தமிழாய்வு மன்றம்
ஆக்கூர் முக்கூட்டு - 609 301.
தரங்கம்பாடி வட்டம்,நாகை மாவட்டம்
தமிழ்நாடு.

எட்டாம் ஆண்டு நிறைவு விழா - கவிஞர்கள் சங்கம அழைப்பிதழ்

தமிழ் மொழிக்குச் சிறந்த நற்சேவையைச் செய்துவரும் உ.வே.சா.தமிழாய்வு மன்றம் எட்டாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கவிஞர்களை ஒன்றிணைக்கும் விதமாக, கவிதைத் தொகுப்பு வெளியிட உள்ளது. இத் தொகுப்பிற்காகக் கவிஞர்களிடமிருந்து கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.
தற்கால இலக்கியம் - கவிதை என்ற தலைப்பில் நூற்தொகுப்புகள் வெளியிடப்பட உள்ளன. இத்தொகுப்பில் தமிழ் மக்களின் வாழ்வியலை உங்களின் கவிதையில் பதிவு செய்யுங்கள். உங்களின் மொழி அமைப்பே தற்காலத் தமிழின் கட்டமைப்பு. கூட்டு முயற்சியின் பதிவே தமிழ்ச் செம்மொழி என்ற அடையாளம்.

விதிமுறைகள்

கவிதைகள் மட்டுமே வரவேற்கப்படுகின்றன
யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
எழுதப்படும் கவிதை தனி மனிதரைப் பற்றியும் சாதி,மதங்களைப் பற்றியும் அமையக்கூடாது. தேசியத்திற்கு எதிராக எழுதக்கூடாது.
தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகள் மட்டுமே நூற்தொகுப்பாக ISBN எண்ணுடன் வெளியிடப்படும்.
மரபுக்கவிதை, புதுக்கவிதை, கைக்கூ கவிதை என்ற வரையறை இல்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிஞர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
பதிவுக் கட்டணம் இல்லை.
கவிஞர்கள் கவிதையுடன் தங்களது தன் விபரக்குறிப்பைப் புகைப்படத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
கவிதைகள் மேலே கண்ட முகவரிக்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் - 15.04.2010.

Tuesday, March 16, 2010

ஒருமைவகைப் பல்கலைக்கழகம் - எதிர்ப்பு உண்ணாவிரதம் - நகர்வு ஒளிப்படங்கள்

ஒருமைவகைப் பல்கலைக்கழகம் - எதிர்ப்பு உண்ணாவிரதம் - மயிலாடுதுறை



அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாகை மாவட்ட மாணவரணிச் செயலர் திரு.நற்குணன் அவர்கள் உண்ணாவிரத பந்தலுக்கு வந்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் பெ.ஜெயகாந்தி அவர்களுக்குச் சால்வை அணிவித்துப் போராட்டம் வெற்றியடை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். சுமார் 30 நிமிடங்கள் உண்ணாவிரத நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டார். திரு.நற்குணன் அவர்களுடன் நாகை மாவட்டப் பொறுப்பாளர்கள், மயிலாடுதுறை நகர,ஒன்றியப் பொறுப்பாளர்களும் வருகை தந்திருந்தனர்.



ஒருமைவகைப் பல்கலைக்கழகங்களை எதிர்த்து கல்லூரி ஆசிரியர்,அலுவலர், மாணவர் சங்கங்கள் சார்பில் மயிலாடுதுறையில் 16.03.2010 உண்ணாவிரதம் நடைபெற்றது

அரசுக் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளைத் தமிழக அரசு ஒருமைவகைப் பல்கலைக்கழகமாக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. அந்த முடிவினைக் கைவிடவும், அதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவைக் கலைக்கவும் வலியுறுத்தி ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 16.03.2010 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, AUT மாநிலத் தலைவர் முனைவர் பெ.ஜெயகாந்தி அவர்கள் தலைமையிலும், தமிழ்நாடு நிதிஉதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்கப் பொறுப்பாளர் (ஏவிசி கல்லூரி) இரவிச்சந்திரன் அவர்கள் முன்னிலையிலும் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத நிகழ்ச்சியில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி, ஞானம்பிகை அரசு பெண்கள் கல்லூரி, தருமபுரம் ஆதினக் கலைக்கல்லூரி, பொறையாறு டிபிஎம்எல் கல்லூரி, பூம்புகார் கல்லூரிகளிலிருந்து சுமார் 200 பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். மாணவர் சங்கங்களின் சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்தி, இந்திய தொழிற்சங்க மைய நாகை மாவட்டச் செயலர் ஆர்.இராமானுசம், சிபிஎம் ஒன்றியச்செயலர் திரு.டி.கணேசன், மயிலாடுதுறை அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் திரு.இராயர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நாகை மாவட்டச் செயலாளர் திரு.ஸ்டாலின், இந்திய மாணவர் சங்க நாகை மாவட்டச் செயலர் திரு.சிங்கரவேலு, இந்திய மாணவர் பெருமன்றம் சார்ந்த திரு.அருள்ராஜன், இந்தியப் பெருமன்ற நாகை மாவட்டச் செயலர் திரு.சுரேஷ் ஆகியோர் உரையாற்றினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தஞ்சை மண்டலத் தலைவர் முனைவர் தி.நெடுஞ்செழியன் மற்றும் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் மண்டல இணைச் செயலர் முனைவர் திலகவதி ஆகியோர் கவனித்துக் கொண்டனர்.



-மயிலாடுதுறையிலிருந்து தமிழ்த்திணைக்காக நிலவன்(சிறப்பு செய்தியாளர்)

Monday, March 15, 2010

மாணவர் சாரங்கபாணி நினைவுநாள்

மாணவர் சாரங்கபாணி நினைவுநாள் - 15.03.2010



சிறப்புரை : எழுத்தாளர்,கவிஞர் சூரியதீபன்

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது தாய்மொழிக் காக்க தன்னுயிரை தீயினுக்குக் கொடுத்து இந்தி ஆதிக்கத்தைத் தடுத்தான் என்பது மொழிப் போராட்ட வரலாறு. இதேநாளில் 1965இல் ஈகியாய் தமிழர்தம் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் மாணவமணி சாரங்கபாணியின் நினைவுநாள் சிறப்புக் கூட்டம் மயிலாடுதுறை வருவாய் அலுவலர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திரு.நாக.இரகுபதி தலைமை தாங்கினார். இந்த விழாவில் ஏவிசிக் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் த.செயராமன், தமிழறிஞர் முனைவர் கி.செம்பியன், மயிலாடுதுறை முத்தமிழ்மன்றத் தலைவர் சிவ.கோபாலகிருட்டினன்,தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் பேராசிரியர் இரா.முரளிதரன் ஆகியோர் உரையாற்றினார்கள். மொழிப் போராட்டக் களவீரர், எழுத்தாளர்,கவிஞர் சூரியதீபன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவிற்கு ஏவிசி கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சு.தமிழ்வேலு வரவேற்புரையாற்றினார். தமிழ்ச் சான்றோர் ந.கலியபெருமாள் நன்றி கூறினார். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் தமிழ்ச் சான்றோர்கள் திரண்டுவந்து விழாவைச் சிறப்பித்தார்கள். தமிழ்த்திணையின் ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் தமிழ்த்திணைக்காக ஒளிப்படங்களை எடுத்தார்.
- தமிழ்த்திணைக்காக மயிலாடுதுறையிலிருந்து நிலவன்(சிறப்புச் செய்தியாளர்)

தமிழுக்கா உயிர் நீத்த ஈகி மாணவர் சாரங்கபாணி நினைவுநாள் ௧௫.0௩.௧0, மயிலாடுதுறை

Sunday, March 07, 2010

உலக மகளிர் தினம் - ஜனநாய மாதர் சங்கம் - உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு - மயிலாடுதுறை 07.03.10

ஜனநாயக மாதர் சங்கப் பொதுச்செயலர் உ.வாசுகி சிறப்புரை- மயிலாடுதுறை (07.03.2010)




ஜனநாயக மாதர் சங்கப் பொதுச்செயலர் உ.வாசுகி சிறப்புரை

மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 07.03.2010 ஞாயிறு மாலை 5.00 மணியளவில் ஜனநாயக மாதர் மற்றும் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் உலக மகளிர் தினம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு ஜி.கலைச்செல்வி தலைமை தாங்கினார். பி.புவனேஸ்வரி மற்றும் எல்.பி.வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்.தேன்மொழி வரவேற்புரை ஆற்றினார். திருமதி ஆர்.பத்மாசினி நன்றியுரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் உ.வாசுகி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் உரையின் சில பகுதிகள் :
உலகப் பெண்கள் தினம் என்பது போராடிப் பெற்றதாகும். 8 மணி நேரம் வேலை, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணிநேரம் உறக்கம் என்ற அடிப்படையில் மே தினத்தைப் பெற்றோம். அதுபோலவே பெண்களின் உரிமைக்காகவும் நாம் போராடி உரிமைகளைப் பெற்ற நாள்தான் மார்ச் 8. நம் பணிகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இதில் யாரும் சலிப்படைய வேண்டிய தேவையில்லை. நாம் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்போம். நம் கோரிக்கைகள் இன்று அல்ல, நாளை அல்ல, நாளை மறுநாள் என்று என்றாவது ஒருநாள் நிறைவேற்றப்படும். அந்த நம்பிக்கைகளோடு தொடர்ந்து நாம் போராடிக் கொண்டிருப்போம்.
இன்றைக்கு எல்லா நிலைகளிலும் போராடி வாழ்ந்து வரும் பெண்களுக்குப் பிரச்சனைகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் பெங்களூருவில் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாட்டில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அதனை நிறைவேற்றுவதற்குப் போராட்டங்களைத் திட்டமிட்டிருக்கிறோம்.
1.விழுப்புரத்தில் 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவியை ஒரு இளைஞர் காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார். இதனை அந்தப் பெண் தன் பெற்றோரிடம் கூறியிருக்கிறார். பெற்றோர் அந்த இளைஞரின் பெற்றோரிடம் முறையிட, அந்த இளைஞர் பின்னால் சுற்றுவதை நிறுத்தி இருக்கிறார். ஒரு வாரம் கழித்து அந்த இளைஞர் அந்தப் பெண்ணை வழிமறித்து தன்னைக் காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்த, அந்தப் பெண்ணின் குடும்பத்தார் அதே ஊரில் வேறு தெருவிற்கு மாறிவிட்டார்கள். இந்நிலையில் தன்னை ஏற்க மறுத்த அந்தப் பெண்ணை பழிவாங்கும் நோக்கத்துடன், அம்மா, அப்பாவுடன் வீட்டிற்குள் இருந்த அந்த பெண்ணின் மீது திராவகம் என்னும் ஆசிட்டை வீசி இருக்கிறான். அந்தப் பெண்ணின் குடும்பம் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 4 மாதங்கள் உள்நோயாளியாக இருந்து மனஉளைச்சலோடு சிகிச்சை பெற்றுவந்தனர். தற்போது அந்த பெண் எம்.ஏ.,எம்.பில். முடித்திருக்கிறார். அந்த இளைஞனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை. அந்தப் பெண் பெங்களூரு மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போது, என் முகத்தை நான் கண்ணாடியில் பார்ப்பது இல்லை. எனக்குத் துன்பம் செய்தவன் சிறையில் இருக்கிறான். ஆனால் படித்து முடித்துள்ள எனக்கு என் முகத்தால் வேலை கிடைக்கவில்லை என்றாள். இதுபோன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சிகிச்சைக்கான உதவிகளையும் அவர்களின் மறுவாழ்வுக்காக அரசு வேலைவாய்ப்புகளை தர தனியாக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றார்.
2. உயர்சாதி பெண்கள் தாழ்த்தப்பட்டசாதி ஆண்களைத் திருமணம் செய்துகொண்டால் உயர்சாதி சமூகத்தவர் அவர்களைக் கொன்றுவிட சமூக ஆணை பிறப்பிக்கின்றார்கள். மகாராஷ்டத்தில் இப்படி ஒரு பெண் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். அவளின் அண்ணன் இந்தப் பெண்ணின் மாமனார், மாமியார், கணவர் மற்றும் அவர் நண்பர் என 4 பேரை கொலை செய்துவிடுகிறார். 8 மாத கர்ப்பிணியான அந்தப் பெண் சோதனைக்காக மருத்துவமனை சென்ற நேரத்தில் இந்த கொலைகள் நடந்து முடிகின்றன. உயர்சாதி பெண்ணின் அண்ணனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் அந்த தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்படுகிறது. உயர்சாதி இளைஞர் அவமானம் தாங்கமுடியாமல் செய்த இந்த குற்றம் திட்டமிட்டு செய்யப்பட்டது அல்ல என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் அந்த பெண் இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை. 8மாத கர்ப்பிணியாக இருந்த நான் கொலை செய்யப்படவில்லை. அப்பாவின் முகத்தைப் பார்க்காத என் குழந்தைக்கு இப்போது 3 வயது. நான் இதுவரை கொலை செய்யப்படவில்லை. உயர்சாதி இளைஞனின் உணர்வுகளை மதித்த உச்ச நீதிமன்றம், தாழ்த்தப்பட்ட சாதியில் மணம் முடித்துக் கொண்ட என் மன உணர்வுகளை மதிக்கவில்லை என்றாள். இதுபோன்ற சமூகங்கள் நடத்தும் கொலைகளைத் தடுக்க புதிய சட்டங்கள் இயற்றவேண்டும் என்றார்.
3. பெண்களைக் காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு, ஆண்கள் கைவிடும் போக்கும் இப்போது அளவுக்கு அதிகமாகி வருகின்றது. இதற்கு காரணம், இதுபோன்ற தவறுகளுக்கு ஆண்கள் நீதிமன்றத்தால் 6 மாதம் சிறை 600 ரூபாய் அபராதம் என்ற நிலை உள்ளது. இதனால் ஆண்களிடம் பெண்களை ஏமாற்றும் போக்கு அதிகமாகி வருகிறது. இதனைத் தடுக்க சிறைத் தண்டனையை அதிகமாக்கவும், அபராதத் தொகையை அதிகமாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றார்.
மேலும், அதிகரித்து வரும் விலைவாசி, பெட்ரேல் டீசல் விலை உயர்வு, மரபணு நீக்கம் செய்யப்பட்ட கத்தரிக்காய், பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு போன்ற பல்வேறு சமூக பிரச்சனைச் சுட்டிக் காட்டி சிறப்புரையாற்றினார்.

AUT - தலைமைப் பண்பு பயிற்சி முகாம் - சேலம் - ஏற்காடு - அழகிய காட்சிகள்

அய்யனார் கோவில் - மயிலாடுதுறை

ஈழத்தமிழர் ஆதரவு ஊர்வலம் - மயிலாடுதறை

லோகம்பாள் (அம்மா) நினைவு நாள் - கீழக்கல்கண்டார் கோட்டை (31.05.2009)

AVCC - AUT முனைவர் தி.நெடுஞ்செழியன் பணியிடை நீக்கம் உண்ணாவிரதம் 1

AVCC - AUT முனைவர் தி.நெடுஞ்செழியன் பணியிடை நீக்கம் உண்ணாவிரதம் 2

AVCC -AUT முனைவர் தி.நெடுஞ்செழியன் பணியிடை நீக்கம் உண்ணாவிரதம் 3

மயிலாடுதுறை JAC முனைவர் தி.நெடுஞ்செழியன் பணியிடை நீக்கம் ஆர்ப்பாட்டம்

AVCC - AUT முனைவர் தி.நெடுஞ்செழியன் பணியிடை நீக்கம் ஆர்ப்பாட்டம்1

AVCC - AUT முனைவர் தி.நெடுஞ்செழியன் பணியிடை நீக்கம் ஆர்ப்பாட்டம் 2

AVCC - AUT முனைவர் தி.நெடுஞ்செழியன் பணியிடை நீக்கம் ஆர்ப்பாட்டம் 3

ஜிம்மி நாய் - நிலவன் வளர்ப்பு